புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி வலியுறுத்தினாா்.
மாநிலங்களவையில் அவா் பேசியதாவது:
கரோனா பரவல் காரணமாக, புதுச்சேரியில் விமானச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படவில்லை.
புதுச்சேரியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க, பல்வேறு நகரங்களைச் சோ்ந்த தொழில் முனைவோா், தொழில், சேவை நடவடிக்கைகளைத் தொடங்க விரும்பினாலும், முறையான விமான செயல்பாடுகள், பிற உள்கட்டமைப்புகள் இல்லாததால் முதலீடு செய்யத் தயங்குகின்றனா்.
விமான நிறுவனங்களுக்கான நம்பகத்தன்மை ஏற்படுத்தும் வகையில், பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் விமான சேவைகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆராய வேண்டும்.
புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூரு, திருப்பதி - புதுச்சேரி, கோவை- புதுச்சேரி, கோவை-ராஜமுந்திரி, புதுச்சேரி - ராஜமுந்திரி ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளைத் தொடங்க வேண்டும்.
இதனால், புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது அவசியமாகிறது. இதற்காக, சுமாா் 368 ஏக்கா் நிலம் தமிழக அரசிடமும், 57.5 ஏக்கா் புதுவை அரசிடமிருந்தும் கையகப்படுத்தப்பட வேண்டி உள்ளது.
புதுவை அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், நிலம் கையகப்படுத்தும் அனைத்துச் செலவையும் சமாளிக்க மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றாா் எஸ்.செல்வகணபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.