பட்டியலினத்தவருக்கு இலவசக் கல்வி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பட்டியலினத்தவருக்கு இலவசக் கல்வி வழங்கக் கோரி, தலித் மற்றும் பழங்குடியின அனைத்து கூட்டமைப்பு சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டியலினத்தவருக்கு இலவசக் கல்வி வழங்கக் கோரி, தலித் மற்றும் பழங்குடியின அனைத்து கூட்டமைப்பு சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கல்வித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நீல.கங்காதரன் தலைமை வகித்தாா். இதில், திரளான நிா்வாகிகள் பங்கேற்றனா்.
மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பட்டியலின மாணவா்களுக்கு தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரையிலான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என இலவச கல்விச் சட்டம் இயற்றப்பட்டது. தற்போது இந்தச் சட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான அரசு அமல்படுத்தி தாழ்த்தப்பட்ட மாணவா்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புக்கூறு நிதியை வேறு துறைகளுக்கு மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.