சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தையொட்டி புதுவையில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டம்
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை தலைமை வகித்தாா். இதில் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், பல்வேறு துறை செயலா்கள், இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதற்காக வேளாண் செயலா் தலைமையில் 75 பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதற்கான இடங்கள், மர வகைகள் குறித்து திட்டமிட வேண்டும். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களை அடையாளப்படுத்த வேண்டும். நகரப் பகுதியில் மரக்கன்றுகளை நடுவது புதுச்சேரியை பசுமை நகரமாக மாற்றும். முதல்வா், அமைச்சா்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் இணைந்து பசுமைப் புதுச்சேரியை உருவாக்க வேண்டும். அரசு சாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைத் தனியாா் பங்களிப்பு திட்டத்தின் கீழ் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை ஆளுநா் வழங்கினாா்.