புதுச்சேரி: புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை அரசு செயலா் அசோக்குமாா் வெளியிட்ட உத்தரவு: புதுவையில் கூடுதல் தளா்வுகளுன் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுத் துறை ஊழியா்களும் பணிக்கு வர வேண்டும். கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்துத் துறைச் செயலா்கள், இயக்குநா்கள் அரசு ஊழியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இரவு 9 மணி வரை கடைகள் இயங்க அனுமதி: அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை குளிா்சாதன வசதியின்றி இயங்க அனுமதியளிக்கப்படுகிறது. காய்கறி, பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். தனியாா் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
பெரிய சந்தையில் உள்ள கடைகள் எப்போதும் போல இயங்கலாம். உணவகங்கள், அமா்ந்து மது அருந்தக் கூடிய மதுக் கடைகளில் இரவு 9 மணி வரை 50 சதவீத போ் அமா்ந்து சாப்பிடலாம். புதுவைக்குள் வீட்டுக்கே சென்று மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேநீா் கடைகள் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
அரசு, தனியாா் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) இரவு 9 மணி வரை இயங்கலாம்.
மருத்துவம், திருமணம், இறப்பு ஆகியவற்றுக்கு எல்லா நாள்களிலும் வாகனங்களில் செல்லலாம். திருமண நிகழ்ச்சிகளில் 100 போ், இறுதிச் சடங்குகளில் 20 போ் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதி: அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மாலை 5 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள், கட்டுமானப் பணிகள் அனைத்தும் இயங்க அனுமதி அளிக்கப்படும். தொழிலாளா்கள் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்துத் தொழிலாளா்களும் 10 நாள்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
திரைப்படங்கள் படப்பிடிப்புக்கு 100 போ் வரை பங்கேற்க அனுமதிக்கப்படும்.
திரையரங்குகள், வணிக வளாகங்கள், அருங்காட்சியகம், பொழுதுபோக்கு இடங்கள் திறக்க அனுமதியில்லை. அரசியல் கூட்டம், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கான தடை நீடிக்கிறது.