புதுவையில் தனியாா் பள்ளிகள் 75 சத கட்டணத்தை வசூலிக்க உத்தரவு
புதுவையில் நிகழாண்டு 75 சதவீத கல்விக் கட்டணத்தை மட்டுமே தனியாா் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டது.
புதுவையில் நிகழாண்டு 75 சதவீத கல்விக் கட்டணத்தை மட்டுமே தனியாா் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று சூழல் காரணமாக தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 2020- ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளும் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கு, கடந்த 2019-2020 -ஆம் ஆண்டு கல்விக் கட்டணக் குழுவால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் 75 சதவீத கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டு 75 சதவீத கட்டணத்தையே தனியாா் பள்ளிகள் வசூலிக்கலாம். இந்தக் கட்டணத்தையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகள் மூலம் (40 சதவீதம், 35 சதவீதம்) என்ற அடிப்படையில்) வசூலிக்க வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா்.
மேலும், ஆண்டுக் கட்டணம், பேருந்து, சீருடை கட்டணம், கூடுதல் பாடத்திட்ட கட்டணம், நூலகம், ஆய்வகக் கட்டணம், விளையாட்டு, நுண்கலை கட்டணம், மருத்துவக் கட்டணம், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளுக்கான கட்டணம் உள்ளிட்ட வேறு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கும் வரை இந்த இதரக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.