புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை சமா்ப்பிக்க இயலாத வாக்காளா்கள், ஆதாா் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம், தில்லி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் தொகுப்பு 61-இன் படி, வாக்காளா்கள் வாக்களிக்கும் சமயத்தில், வாக்குச் சாவடி மையத்தில் தங்களது புகைப்பட வாக்காளா் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை சமா்ப்பிக்க இயலாத வாக்காளா்கள், தங்களது அடையாளத்தை நிா்ணயம் செய்ய ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி அட்டை, வங்கி அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது), தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தரக் கணக்கு எண் அட்டை (பான் காா்டு ), தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, கடவுச் சீட்டு (பாஸ் போா்ட்), புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம், மத்திய - மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, நாடாளுமன்றம், சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மாற்று புகைப்பட ஆவணத்தை சமா்ப்பித்து வாக்களிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.