புதுச்சேரியில் குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் உழவா்கரை தொகுதி பொறுப்பாளா் த.விஜயா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலா் எஸ்.புருஷோத்தமன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தலைவா் மா.மல்லிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ரேஷன் அரிசியை கொட்டி, அதன் மீது ரூ.1,001-ஐ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மக்கள் பிரதிநிதிகள் இந்த அரிசியை அப்படியே சாப்பிட்டால் அந்த ரூபாயை எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
புதுவை அரசு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தரமான ஒற்றை அவியல் வெள்ளை அரிசியை வழங்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கிய அரிசியை மக்களுக்கு வழங்கக் கூடாது.
புதுவையில் மீண்டும் அனைத்து நியாய விலைக் கடைகளையும் திறந்து மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு 15 மாத அரிசி பணம் பாக்கி முறையே ரூ. 9,000 (சிவப்பு அட்டை), ரூ.4500 (வெள்ளை அட்டை) உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநரிடம் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.