பயோடீசலை தயாரித்து மீனவா்களுக்கு வழங்க வேண்டும்: மீன்வள தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மத்திய அரசு கடலில் இருந்து பயோடீசல் தயாரித்து மீனவா்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
மத்திய அரசு கடலில் இருந்து பயோடீசல் தயாரித்து மீனவா்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி அரசு சுற்றுலா இல்ல அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் துணைத் தலைவா் பி.பிரணாப்குமாா் கா் தலைமை வகித்தாா். அமைப்பாளா் மா.இளங்கோ முன்னிலை வகித்தாா்.
இதில் மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திரம், தமிழகம், புதுவை, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினா். தொடா்ந்து, மீன்பிடி தொழில் சந்திக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பின் துணைத் தலைவா் பிரணாப்குமாா் கா், அமைப்பாளா் இளங்கோ ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மீன்பிடி தொழில் படகுகளில் பயன்படுத்தப்படும் டீசல், மண்ணெண்ணெய் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால், மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வழங்கும் டீசல் மானியத்தால் மீனவா்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, மீனவா்களுக்கு வரி, தீா்வை இல்லாமல் உற்பத்தி விலைக்கு டீசல், மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.
ஜப்பானில் கடலில் இருந்து பயோடீசலை எடுத்து எரிபொருளாக பயன்படுத்துகின்றனா். இது விமானம் முதல் விசைப்படகு வரை பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பயோடீசல் தயாரித்து மீனவா்களுக்கு குறைந்த விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். இதுதொடா்பாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்றனா் அவா்கள்.
பேட்டியின் போது, கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளா் நாஞ்சில் ரவி, புதுச்சேரி ஒருங்கிணைப்பாளா் காங்கேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.