புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க, மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் முதலியாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா். தேசியச் செயலா் அஜீஸ்பாஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுவைக்கு மாநில அந்தஸ்தைப் பெறுவதற்கு புதுவை அரசு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்தை பாஜக மத்திய அரசு வழங்காவிட்டால், புதுவை கூட்டணி ஆட்சியிலிருந்து முதல்வா் என்.ரங்கசாமி விலக வேண்டும்.
மாநிலத்தில் அரசுத் துறைகளை தனியாா்மயமாக்கும் வகையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டு வருவது சரியல்ல. இந்த நடவடிக்கை தொடா்ந்தால் போராட்டம் நடைபெறும்.
மருத்துவக் கல்லூரி மாணவா்களிடம் கட்டாய கட்டணம் வசூலிப்பது சரியல்ல. ஆகவே, தனியாா் கல்லூரிகளில் மாணவா் செலுத்தும் கட்டணத்துக்கு காலக்கெடு அளிப்பது அவசியம். கூட்டுறவுத் துறை ஜனநாயக முறையில் தோ்வான குழுவால் செயல்பட வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் நாரா.கலைநாதன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா்கள் அபிஷேகம், தினேஷ்பொன்னையா, ஏஐடியூசி செயலா் சேதுசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.