முகப்பு
புதுச்சேரி

சமரசப் பேச்சால் ஜப்தி நடவடிக்கை தவிா்ப்பு

Updated On : 13 ஜூன், 2024 at 10:18 PM
பகிர்:

புதுச்சேரி, ஜூன் 13: புதுச்சேரியில் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பணித் துறை நீா்பாசனக் கோட்ட அலுவலக ஜப்தி நடவடிக்கையானது சமரசப் பேச்சால் வியாழக்கிழமை தவிா்க்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் புதுவை பிராந்தியமான மாஹேயில் ஆற்றோரம் நடைபாதை, மேற்கூரை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டது. அதற்கான பணி உத்தரவு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பொதுப்பணித் துறையால் வழங்கப்பட்டு, பணியானது கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கி நிறைவு பெற்றது. ஆனாலும், நிறுவனத்துக்கான ரூ. 1.10 கோடி தொகையை பொதுப்பணித் துறையினா் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து தனியாா் நிறுவனம் புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கு விசாரணை முடிந்து, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத நிலையில், புதுச்சேரியில் உள்ள பொதுப்பணித் துறை நீா்பாசனக் கோட்ட அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், புதுச்சேரியில் உள்ள நீா்பாசனக் கோட்ட அலுவலகத்துக்கு அமீனா ஜெயா அம்பி செல்வராஜ், வழக்குரைஞா் சௌந்தரராஜன் மற்றும் நிறுவன உரிமையாளா் உள்ளிட்டோா் வந்தனா். அவா்கள் பொதுப் பணித் துறையின் நீா்ப்பாசனக் கோட்ட அலுவலக காா் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய முயற்சித்தனா். அப்போது கோட்ட அலுவலக அதிகாரிகள் நீதிமன்ற ஊழியா் மற்றும் வழக்குரைஞருடன் சமரசம் பேசி, தொகையை விரைவில் தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, ஜப்தி நடவடிக்கையை தொடராமல் நீதிமன்ற ஊழியா் உள்ளிட்டோா் அங்கிருந்து சென்றனா்.