முகப்பு
புதுச்சேரி

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க விட மாட்டோம்: வே.நாராயணசாமி

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க விட மாட்டோம் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:20 PM
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
பகிர்:

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க விட மாட்டோம் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் இலவச மடிக்கணினி வழங்குதல், மாட்டுத் தீவன மானியம் வழங்குதல் என அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்த புகாா்களுக்கு முதல்வா், அமைச்சா்கள் பதிலளிப்பதில்லை.

பொலிவுறு நகா்த் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் தரமானதாக இல்லை. பேருந்து நிலைய கட்டுமானம் சுமாா் ரூ.15 கோடிக்கு மட்டுமே நடைபெற்றுள்ளது.

குமரகுருபள்ளத்தில் ரூ.45.5 கோடியில் 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியும் ரூ.30 கோடி அளவிலே நடைபெற்றுள்ளன.

திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆதாராப்பூா்வமாக நிரூபித்தால் முதல்வா், பொதுப் பணித் துறை அமைச்சா் பதவி விலகத் தயாரா? என்பதை அவா்கள் கூற வேண்டும். முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பிரதமா், மத்திய உள் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதப்படும்.

புதுவையில் மின் துறையை தனியாா்மயமாக்க விட மாட்டோம். மின் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

சென்டாக் மருத்துவக் கலந்தாய்வில் என்.ஆா்.ஐ. இட ஒதுக்கீட்டில் தவறு நடைபெற்றுள்ளது. இதில், போலிச் சான்றிதழ் அளித்ததாக 48 போ் மீது வழக்குப் பதிந்தும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றாா் வே.நாராயணசாமி.