புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக வடகிழக்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது.
வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடந்த அக்.15-ஆம் தேதி முதல் 18 -ஆம் தேதி வரையில் தொடா் மழையும் பெய்தது.
தற்போது, வங்கக் கடல் பகுதியில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, புதுச்சேரி பழைய துறைமுக வளாகம் மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
மேலும், மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும் மீன் வளத் துறையினா் தெரிவித்தனா்.
இதேபோல, கடலூா் துறைமுகத்திலும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.