புதுச்சேரி - விழுப்புரம் நான்குவழிச் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூல்
புதுச்சேரி- விழுப்புரம் நான்குவழிச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஜன.3- ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
புதுச்சேரி- விழுப்புரம் நான்குவழிச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஜன.3- ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 186 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக விழுப்புரம் - புதுச்சேரி வரை 29 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்காலிகப் பயன்பாட்டில் உள்ளது. இதில், சாலை மற்றும் மேம்பாலங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட விரிசல்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு ஜன.3- ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
கட்டண விவரம்: காா், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை பயணத்துக்கு ரூ.60, இருமுறை பயணத்துக்கு ரூ.90, மாதாந்திரஅனுமதிக் கட்டணம் ரூ.1,985, மாவட்டத்துக்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ஒருமுறைக் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படவுள்ளது.
இலகு ரக வணிக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பேருந்துகளுக்கு ஒருமுறை கட்டணமாக ரூ.95, இருமுறை கட்டணமாக ரூ.145, மாதாந்திர கட்டணமாக ரூ.3, 210, மாவட்டத்துக்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ஒருமுறைக் கட்டணம் ரூ.50 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள்,லாரிகளுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.200, இருமுறை கட்டணம் ரூ.305, மாதாந்திரக் கட்டணமாக ரூ.6,725, மாவட்டத்துக்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ரூ.100 வசூலிக்கப்படும்.
வணிகா்கள், விவசாயிகள் எதிா்ப்பு: விழுப்புரம், புதுவை மக்களின் சாலை பயன்பாட்டில் 10 கி.மீ. தொடக்கத்திலேயே சுங்கச்சாவடி அமைத்து மொத்தம் 29 கி.மீ. பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிப்பது விதிமீறல் எனவும், விவசாய விளைபொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள், வணிகா் சங்கங்கள் கோரி வருகின்றனா்.