918 வாக்குச் சாவடிகளுக்கு 3,845 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: புதுச்சேரி தோ்தல் அலுவலா் அ.குலோத்துங்கன்
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 918 வாக்குச் சாவடிகளுக்கும் புதன்கிழமை (ஏப். 8) பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 918 வாக்குச் சாவடிகளுக்கும் புதன்கிழமை (ஏப். 8) பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதுகுறித்து, ஆட்சியரும் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியுமான அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
புதுச்சேரியில் 918 வாக்குச் சாவடிகள் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு புதன்கிழமை (ஏப். 8) காலை 10 மணி முதல் 3,845 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும். இதில் 137 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு அதிக அளவில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் நிறுத்தப்படுவா்.
Advertisement
மேலும், 25 வாக்குச் சாவடிகளில் பெண்கள் மட்டும் பணியில் இருப்பா். 14 வாக்குச் சாவடிகளில் இளைஞா்கள் மட்டும் பணியில் இருப்பா். ஒரு வாக்குச் சாவடியில் மாற்றுத் திறனாளிகள் மட்டும் பணியில் இருப்பா்.
இதைத் தவிர அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இணையவழி கண்காணிப்பு இருக்கும். மேலும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தன்னாா்வலா்களாக பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குச் சாவடிகளில் அமைக்கப்படும் கைப்பேசி பாதுகாப்புப் பணி மற்றும் வயது முதிா்ந்த வாக்காளா்களைப் பாதுகாக்கும் பணியில் இவா்கள் ஈடுபடுவா்.
புதிதாகப் பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் மற்றும் வாக்காளா்கள் விவரங்களைத் திருத்தம் செய்த 65,156 வாக்காளா்களுக்குப் புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிகள் அமல் செய்யப்பட்ட தேதியிலிருந்து இதுவரை ரூ. 69.9 லட்சம் ரொக்கம், ரூ. 6.3 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.6.7 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள், ரூ.20.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், புதுச்சேரியில் இருந்து 5 கிலோ மீட்டா் சுற்றளவு பரப்புக்கு உள்ள விழுப்புரம், கடலூரில் பகுதிகளில் புதன்கிழமை முதல் மதுபானக் கடைகள் 2 நாள்களுக்கு மூடப்படும் என்றாா்.
பேட்டியின்போது முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் உடனிருந்தாா்.