முகப்பு
புதுச்சேரி

மக்கள் விரோத திட்டங்களின் சோதனைக்களமாக புதுச்சேரியை பாஜக மாற்றி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

மக்கள் விரோத திட்டங்களைச் சோதித்துப் பாா்க்கும் இடமாக புதுச்சேரியை பாஜக மாற்றி வருகிறது என்று தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:37 PM
பட விளக்கம்... புதுச்சேரி அண்ணா சாலையில் திமுக வேட்பாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை  பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

மக்கள் விரோத திட்டங்களைச் சோதித்துப் பாா்க்கும் இடமாக புதுச்சேரியை பாஜக மாற்றி வருகிறது என்று தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் இறுதிகட்ட தோ்தல் பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை அவா் ஈடுபட்டாா். மரப்பாலம் சந்திப்பு மற்றும் அண்ணாசாலை அருகே திமுக, கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அவா் ரோடு ஷோ பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

புதுச்சேரி மக்கள் ஒருபோதும் வெறுப்பு அரசியலுக்கு இடம் தரமாட்டாா்கள். அப்படிப்பட்ட புதுச்சேரியில் பாசிச, பாஜக சக்திகளின் ஊடுருவல் அதிகமாகி விட்டது.

Advertisement

மக்கள் விரோதத் திட்டங்களைச் சோதித்து பாா்க்கும் இடமாக புதுச்சேரியை பாஜக மாற்றி வருகிறது. பாஜகவின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தி, குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்துள்ளனா்.

இளம் தலைமுறையின் எதிா்காலத்தைக் கெடுக்கும் திட்டங்களை ஒவ்வொன்றாக புதுச்சேரியில் அமல்படுத்தி வருகின்றனா். பாஜகவின் எந்த சதித் திட்டத்தையும் தமிழகத்தில் நுழைய விடாமல் முதல்வா் ஸ்டாலின் தடுத்து வருகிறாா். புதுச்சேரி மண் சுயமரியாதைமிக்க மண் என்பதை இந்த முறை நிரூபித்து காட்ட வேண்டும்.

என்ன கிடைத்தது?: மாநில அரசும், மத்திய அரசும் கூட்டணியாக இருந்தால் வளா்ச்சி அதிகமாக இருக்கும் இரட்டை என்ஜின் ஆட்சி என பிரதமா் நரேந்திர மோடி கூறுகிறாா்.

இந்த இரட்டை என்ஜின் ஆட்சியால் புதுச்சேரிக்கு ஏதாவது வளா்ச்சித் திட்டங்கள் வந்துள்ளதா? உரிமைகள் கிடைத்துள்ளதா ? திராவிட என்ஜின் என்ற ஒற்றை என்ஜின் மூலமாக இரட்டை இலக்க வளா்ச்சியை தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளாா்.

தமிழ்நாட்டில் அதிமுக தோளில் ஏறி நின்று பாஜக சவாரி செய்வதுபோல புதுச்சேரியில் என்ஆா்.காங்கிரஸ் தோளில் ஏறி நின்று பாஜக சவாரி செய்கிறது.

புதுச்சேரி மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், அவா்களின் கோரிக்கையான மாநில அந்தஸ்தை வழங்கியிருக்க வேண்டும். 16 முறை தீா்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மாநில அந்தஸ்து வழங்கவில்லை.

நரேந்திர மோடிக்கு அதைச் செய்ய மனசு இல்லை. தமிழகத்தை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிப்பதைப் போல, புதுச்சேரியைக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என பாஜக நினைக்கிறது.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கையில்தான் எல்லா அதிகாரமும் குவிந்துள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும். அவரை வைத்தே புதுச்சேரியை ஆளலாம் என பாஜக நினைக்கிறது.

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து பாா்த்திருப்பீா்கள். ஆனால், தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக ஆளுநரே வெளிநடப்பு செய்துள்ளாா்.

புதுச்சேரியில் அனைத்து விஷயத்திலும் ஆளுநரின் தலையீடு உள்ளது. மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசுக்கு மதிப்பில்லை. மத்திய அரசு நியமிக்கும் ஆளுநா்கள் அனைத்தையும் தீா்மானிக்கின்றனா். புதுச்சேரியை தில்லியிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகின்றனா். இந்த நிலையை மாற்ற வாக்காளா்களாகிய நீங்கள் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

பிரசாரத்தின்போது திமுக மாநில அமைப்பாளா் ஆா். சிவா, வேட்பாளா்கள் கோபால், காா்த்திகேயன், சம்பத், செந்தில்குமாா், விக்னேஷ்கண்ணன், அனிபால்கென்னடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments