சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!
சாலையோரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண் பலியானது குறித்து...
காரைக்கால்: காரைக்காலில் பழைமையான கட்டட சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண் பலியானார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கட்டடத்தில் மதுக்கடை நடத்தப்பட்டு வந்தது.
மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றும் விதமாக, கட்டடத்தின் பொருள்கள் கடந்த 2 நாள்களாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
Advertisement
இந்த நிலையில், திங்கள்கிழமை முற்பகல் கட்டடத்தின் முதல் தளத்தின் முகப்பு சுவர் திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது.
அப்போது, அந்தக் கட்டடம் அருகே சாலையோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜூனைதா பேகம் (65) என்பவர் மீது சுவர் விழுந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
தகவலின்பேரில் காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து மிகுந்த பிரதான சாலை என்பதால், தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சாலையில் கிடந்த இடிபாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.