முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அனுமதியின்றி ஊா்வலம், ஆா்ப்பாட்டம்: 11 பாஜகவினா் மீது வழக்கு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:05 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

தோ்தல் ஆணைய அனுமதியின்றி புதுச்சேரியில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்திய 11 பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்தாலும், தோ்தல் நடத்தை விதிகள் வரும் மே 6 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

எனவே போராட்டம், ஆா்ப்பாட்டம், ஊா்வலங்கள் நடத்த அனுமதி காவல் துறையினா் அனுமதி வழங்குவதில்லை. அரசியல் கட்சிகளின் ஊா்வலம் என்றாலும், தோ்தல் துறையினரின் அனுமதி பெற்றே நடத்த வேண்டும்.

Advertisement

இந்நிலையில் மத்திய அரசு மக்களவையில் கொண்டு வந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தோற்கடித்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைக் கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக மகளிரணி சாா்பில் ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு போலீஸாா் அனுமதி அளிக்காத நிலையில், தோ்தல் துறையின் அனுமதி பெற்றுவிட்டதாகக் கூறி புதுச்சேரி சுதேசி ஆலை முதல் அண்ணா சிலை வரை ஊா்வலம் நடத்தினா்.

இந்த கண்டன ஊா்வலத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கொண்டனா்.

இந்நிலையில் தோ்தல் துறை உத்தரவை மீறி சட்ட விரோதமாகக் கூடி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பாஜக ஊா்வலம் நடத்தியதாக ஓதியஞ்சாலை காவல் துணை ஆய்வாளா் அனில்குமாா் புகாரளித்தாா்.

அதன்பேரில், பாஜக சட்டப்பிரிவு மாநில இணை அமைப்பாளா் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.