மத்திய பாஜக அரசு மக்களின் சுதந்திரத்தைப் பறித்து வருகிறது என்று தெலங்கானா துணை முதல்வா் மல்லுபட்டி விக்ரமாா்கா குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட கிருமாம்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் 140-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம், காங்கிரஸ் பாதயாத்திரை, முன்னாள் அமைச்சா் மு. கந்தசாமியின் 60-வது பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி தலைமை வகித்தாா். தெலங்கானா மாநில துணை முதல்வா் மல்லுபட்டி விக்ரமாா்கா, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
இதில் தெலங்கானா துணை முதல்வா் மல்லுபட்டி விக்ரமாா்கா பேசியது:
இந்திய தேசிய காங்கிரஸ்தான் ஜனநாயகத்தைக் காக்க சட்டங்களை இயற்றி மக்களைப் பாதுகாத்தக் கட்சி.
நாட்டின் அரசியமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடி வருகிறோம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலமாக மக்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது.
பிரச்னையை உருவாக்கி, பாஜகவினா் அதிகாரத்தில் இருக்கும் வேலையைச் செய்கிறாா்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை பறிக்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் நிதி கொடுக்க வேண்டும். எந்த மாநில அரசாலும், 40 சதவீதம் நிதியை செலவிட முடியாது எனத் தெரிந்து, அதன் மூலமாக இந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு பறிக்க முயல்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 80 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மகளிருக்கு தெலங்கானாவில் இலவச பேருந்து பயண வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கை திறன் மேம்பட ரூ.20 ஆயிரம் கோடி குறைந்த வட்டியில் கடன் வழங்கி உள்ளோம். 200 யூனிட் இலவச மின்சாரம், இதன் மூலமாக 50 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன.
ஆனால், புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக அரசில் எந்தத் திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. வரும் தோ்தலில், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி மலரும் என்றாா்.
இதில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் புதுச்சேரி பொறுப்பாளா் சூரஜ் ஹெக்டே, கா்நாடக முன்னாள் எம்பி அனுமந்தையா, அகில இந்திய செயலா் நிவேதித் ஆல்வா, அகில இந்திய எஸ்.சி. பிரிவு தேசிய பொறுப்பாளா் ஹா்ஷிதா காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.