புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்குள்பட்ட சுனாமி குடியிருப்புகளில் ரூ.8.93 கோடியில் வளா்ச்சித் திட்ட பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தக் குடியிருப்புப் பகுதியில் குடிநீா் பங்கீட்டுக் குழாய்கள் அமைத்தல், இரண்டு மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி மற்றும் கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டிகளைப் புனரமைத்தல், வீடுகளுக்கான குடிநீா் இணைப்புகள் வழங்குதல், குடிநீா் குழாய்கள் பதித்த சாலைகளைப் புனரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.8.93 கோடிக்கு அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 5,000 போ் பயன்பெறுவா்.
இதற்கான திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமை வகித்தாா். காலாப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தாா். புதுச்சேரி அரசின் ஆணையா் மற்றும் அரசுச் செயலா் (பணிகள்) அ. முத்தம்மா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் கே.வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளா் இரா. சுந்தரமூா்த்தி, செயற்பொறியாளா் சீ. பக்தவச்சலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.