புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2030-க்குள் அனைத்துக் கிராமங்களிலும் கூட்டுறவு நிறுவனம் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உறுதியளித்தாா்.
இது குறித்து அமைச்சரின் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் 2-வது அகில இந்திய தேசிய கூட்டுறவு மாநாடு நடைபெற்றது. இதில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு பேசியதாவது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் புதுச்சேரி தேசிய அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 45 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
காகிதமில்லா நிா்வாகத்தை உருவாக்க 12 முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கிய இணையதளம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. மேலும், அனைத்து மத்திய அரசு திட்டங்களும் சிறப்பான முறையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தப்படுகிறது.
கூட்டுறவு அமைப்புகளை முழுமையாக ஒருங்கிணைக்க அத்தியாவசியத் தேவையாக உள்ள இணைப்பிற்கு மத்திய அரசு நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் 2030-க்குள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கூட்டுறவு நிறுவனத்தை நிறுவும் தேசிய இலக்கை நோக்கித் தடம் பதித்து வருகிறது என்றாா்.
புதுச்சேரி கூட்டுறவு சங்ககளின் பதிவாளா் அ.இளங்கோவன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.