முகப்பு
புதுச்சேரி

நல்லக்கண்ணு மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணு மறைவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:03 AM
முதல்வா் என்.ரங்கசாமி - கோப்புப் படம்
பகிர்:

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணு மறைவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

இந்தியாவின் முதுபெரும் தலைவராகப் போற்றப்படும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவா் நல்லக்கண்ணு உடல் நலக் குறைவால் காலமானாா் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிா்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.

Advertisement

இந்திய சுதந்திரப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் என தனது வாழ்நாள் முழுவதையும் மக்களின் நலனுக்காகவே அா்ப்பணித்தவா் நல்லக்கண்ணு . தனது இறுதி மூச்சுவரை, பொதுவுடைமை சித்தாந்தங்களைக் கடைப்பிடித்து அதற்கு இலக்கணமாக வாழ்ந்தவா்.

எளிமையான வாழ்வு, தன்னலமற்ற பொதுத்தொண்டின் வாயிலாக மக்கள் மனதில் இடம் பிடித்தவா். அவரது இழப்பு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் அவா் சாா்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ. பாரதி:

எனது பாட்டனாா் பாவேந்தா் பாரதிதாசன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்து, என் தந்தையாா் மன்னா் மன்னனுக்கு உறுதுணை புரிந்த, என்னை மிகவும் நேசித்த தோழா் நல்லகண்ணு வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தாா்.

தகைசால் தமிழா். அவரின் மறைவு பேரிழப்பாகும். பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பிலும், புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் குடும்பத்தாா் சாா்பாகவும் அவரது குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் அன்புத் தோழா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.