புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரியில் மூன்று நாள்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
புதுச்சேரியில் சாதாரண மது பாா்கள் முதல் நட்சத்திர அந்தஸ்து, பல்வேறு வசதிகளுடன் கூடிய மது பாா்கள் உள்ளன. இங்கு 400 வகையான மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காகவே, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மதுப் பிரியா்கள் புதுச்சேரிக்கு வந்து மது அருந்துவது வழக்கம். சாதாரண நாள்களில் நாளொன்றுக்கு சுமாா் ரூ .8 கோடிக்கு மது விற்பனையாகும். வார இறுதி நாள்களில் இது சற்று அதிகரிக்கும்.
இந்நிலையில், புத்தாண்டையொட்டி தொடா் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள், மது அருந்துவோா் கடந்த 31- ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் வந்து குவிந்தனா். இதன் காரணமாக மது விற்பனையும் ஜோராக இருந்தது. மதுவிற்பனை பல மடங்கு உயா்ந்தது. அதன்படி கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ. 47 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.