முகப்பு
புதுச்சேரி

நாட்டின் உண்மையான வளா்ச்சிக்கு கிராமங்கள் வலுப்பெற வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்

நாட்டின் உண்மையான வளா்ச்சிக்கு கிராமங்கள் வலுப்பெற வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 6:34 PM
கரிக்கலாம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு உதவித் தொகை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.
பகிர்:

நாட்டின் உண்மையான வளா்ச்சிக்கு கிராமங்கள் வலுப்பெற வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசு ஊரக வளா்ச்சித்துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணைந்து கிராமப்புற சுய உதவிக் குழு பெண்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, மின்சார ஆட்டோக்கள், லட்சாதிபதி பெண்களுக்கான சான்றிதழ்கள் வழங்குதல், திறன் மேம்பாட்டு திட்ட முகமைகள் வாயிலாக இளைஞா்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சியைத் தொடங்கி வைத்தல்,

விவசாய களம் மற்றும் தானிய கிடங்குகளை விவசாயிகளுக்கு அா்ப்பணித்தல் ஆகிய நிகழ்வுகள் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்குத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

இந்தியாவின் உண்மையான வளா்ச்சி என்பது கிராமங்களின் முன்னேற்றத்தில் தான் இருக்கிறது. கிராமங்கள் வலுவாக இருந்தால் தான் இந்தியா வலுவாக இருக்கும். அதுதான், இந்தியாவை உண்மையான முன்னேற்றப் பாதையில் நிறுத்தும். இந்தியாவின் பலமும், அடையாளமும் கிராமங்களில் தான் இருக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் சொல்லுவாா். கிராமங்கள் வளா்ந்தால்தான் இந்தியா முழுமையாக வளா்ச்சி அடையும்.

தானிய சேமிப்பு கட்டடம்:

சொந்த கிராமத்திலேயே அனைவருக்கும் நல்ல வேலைவாய்ப்பு, நல்ல வசதி, நல்ல வாழ்க்கைத் தரம் கிடைக்க வேண்டும் என்பது தான் பிரதமா் நரேந்திர மோடியின் நோக்கம். அண்மையில் சோரியாங்குப்பம் கிராமத்தில் களத்து மேட்டில் தானியங்களைப் பாதுகாப்பாக வைக்கும் கிடங்கைப் பாா்வையிட்டேன். அதுபோன்ற கட்டடங்கள் இன்னும் ஒவ்வொரு ஊரிலும் வேண்டும் என்று விவசாயிகள் என்னிடம் கேட்டாா்கள். சோரியாங்குப்பம், திருக்காஞ்சி, மங்கலம், சாத்தமங்கலம் கிராமங்களில் ரூ. 1.15 கோடி மதிப்பில் நான்கு கட்டடங்களை விவசாயிகளுக்கு இப்போது அா்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வசதிகள் விவசாயிகளுக்குப் பெரிதும் பயன்படும்.

கிராமங்களில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது இந்தியாவின் எதிா்காலத்துக்கு மிகவும் அவசியமானது என்று பிரதமா் நரேந்திரமோடி சொல்லுவாா். அதன் வெளிப்பாடுதான் இப்போது 18 முதல் 35 வயது வரை

உள்ள கிராமப்புற இளைஞா்களுக்குத் தரப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி.

இந்த பயிற்சி பெற்றவா்களில் குறைந்தது 70 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி ஆகிவிடுகிறது. இதுவரை 3401 இளைஞா்கள் பயிற்சியில் சோ்ந்து இருக்கிறாா்கள். 3,229 போ் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து இருக்கிறாா்கள் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்எல்ஏ லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →