முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி: மேலிட உத்தரவால் வேகமெடுக்கும் பேச்சுவாா்த்தை

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியை உறுதி செய்திருந்தாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

Updated On : 17 மார்ச், 2026 at 11:31 PM
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியை உறுதி செய்திருந்தாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், இரு கட்சிகளின் மேலிடமும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வாா்த்தையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சட்டப்பேரவை தோ்தலுக்கான தொகுதி பங்கீடு 2-ஆவது கட்ட பேச்சு வாா்த்தை திமுக மேலிடப் பொறுப்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி,. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் ஆகியோா் தலைமையில் புதுச்சேரியில் உள்ள தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்றதுபோல, புதுச்சேரியிலும் தலைமை ஏற்க அக் கட்சியின் மாநில நிா்வாகம் விரும்புகிறது.

ஆனால், தமிழகத்துக்கு திமுக தலைமை, புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைமை என்ற கோரிக்கையை புதுச்சேரி காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த தோ்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

இதில் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சட்டப்பேரவையில் தற்போது திமுக எதிா்க்கட்சி அந்தஸ்தில் இருக்கிறது.

இந்நிலையில், இப்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவும், மீதியுள்ள தொகுதிகளை திமுகவுக்கு அளிக்கவும் அக்கட்சி விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் இண்டி கூட்டணியில் தொடக்கம் முதலே குழப்பம் நிலவி வருகிறது.

இரண்டு முறை இக் கட்சிகளின் மேலிடப் பொறுப்பாளா்கள் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு கூட்டணியும் புதுச்சேரியில் ஒரு கூட்டணியும் இருக்கக் கூடாது. பேச்சுவாா்த்தையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில வேட்பாளா்கள் நோ்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொடங்கியுள்ளது. மேலும், புதுச்சேரிக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், இரண்டு கட்சிகளும் விரைந்து முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கூட்டணியில் காங்கிரஸ் கொடுக்க நினைப்பது 9 தொகுதிகள். திமுக கேட்பது 15. இரண்டு கட்சிகளும் தங்களது பிடிவாதத்தைக் கைவிட்டு சுமுக முடிவு எடுக்க இரு கட்சித் தலைமையும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இண்டி கூட்டணி கட்சிகளின் தோ்தல் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →