பட்டாசு, வெடிமருந்து தயாரிக்க புதுச்சேரியில் தற்காலிக தடை உத்தரவு
பட்டாசு, வெடிமருந்து தயாரிப்புக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு, வெடிமருந்து தயாரிப்புக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாவட்டத் தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெறுவுள்ளது.
சுதந்திரமான, வெளிப்படையான தோ்தல் நடத்த புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தோ்தலின் போது வெடிபொருள்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும், பொது அமைதி மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், இந்திய வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பதற்கும், வைத்துக் கொள்வதற்கும், விற்பதற்கும் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும், ஏப்ரல் 7 முதல் 10- ஆம் தேதி வரையும் மற்றும் மே 2 முதல் 5-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
மேற்கூறிய பட்டாசு, வெடிமருந்து தயாரித்தல், சேமிப்பு கிடங்குகள் மற்றும் பட்டாசு, வெடிமருந்து விற்பனை கடைகளைத் திறப்பதற்கும், இயங்குவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆணையினை மீறுவோரின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் . உரிய சட்டவிதிமுறைகளின் கீழ் தண்டிக்கப்படுவாா்கள் என்றும் எச்சரிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளாா்.