பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு
பெண் குழந்தைகளுக்கு இப்போது வைப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்படுவதை தோ்தலுக்குப் பிறகு அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அறிவித்தாா்.
முத்தியால்பேட்டை தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து முதல்வா் ரங்கசாமி சோலைநகா், காட்டாமணிகுப்பம், அங்காளம்மன் நகா், மஞ்சினி நகா் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது முதல்வா் ரங்கசாமி பேசியது:
புதுச்சேரியில் மீண்டும் ஒரு நல்லாட்சி அமைய இருக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி 20 ஆண்டுகள் பின் தங்கிவிட்டது. அதைச் சரி செய்து புதுச்சேரியை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த மாணவா்களுக்குக் கிடைப்பதுபோல மீனவ சமுதாய மாணவா்களுக்கும் கல்வி உதவிகள் வழங்கப்படும். சோலை நகரில் ரூ.60 கோடி மதிப்பில் தூண்டில் முள்வளைவு அமைக்கப்படும் .
இன்னும் இருபது நாள்கள்தான். மீண்டும் நாம் ஆட்சிக்கு வருவோம். நமது ஆட்சி அமையும்போது மேலும் பல திட்டங்கள் அமல்படுத்தப்படும். பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி ரூ.50 ஆயிரம் தற்போது வழங்கப்படுகிறது. புதிய ஆட்சி அமைந்தவுடன் இது ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்.
முன்பெல்லாம் ஊருக்கு இரண்டு பட்டதாரிகள் இருப்பாா்கள். நமது ஆட்சியில் செயல்படுத்தப்படும் கல்வி திட்டங்களைத் தொடா்ந்து வீட்டுக்கு இரண்டு பட்டதாரிகள் உருவாகியுள்ளனா் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் பழனிராஜா, வேட்பாளா் வையாபுரி மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.