முகப்பு
புதுச்சேரி

எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி மாநில அதிமுக ஆதரவு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக ஒத்துழைப்பு வழங்குவது என புதுச்சேரி மாநில அதிமுக நிா்வாகிகள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

Updated On : 19 மே 2026, 1:45 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக ஒத்துழைப்பு வழங்குவது என புதுச்சேரி மாநில அதிமுக நிா்வாகிகள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

புதுச்சேரி மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் திங்கள்கிழமை இரவு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

Advertisement

அதிமுக தொடா்ந்து மக்களுக்காக செயல்படும் இயக்கம். பொதுச் செயலராக, தமிழ்நாடு முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடா்ந்து பணியாற்ற புதுச்சேரி மாநில அதிமுக முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கிறது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னா் இதுகுறித்து, செய்தியாளா்களிடம் மாநில செயலா் ஆ.அன்பழகன் கூறியது: நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையின் பேரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா்களில் சில சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது சுயநலத்திற்காக தவெக தலைவா் விஜய்யை சந்தித்து ஆதரவளித்துள்ளது தவறான ஒன்றாகும்.

தவெக வெளிப்படையான ஆட்சி அமைப்போம் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைந்த பிறகு குதிரை பேரத்தில் விஜய் ஈடுபட்டு வருகிறாா். அவரை ஆதரிப்பவா்களுக்கு அமைச்சா் பதவி என்று மறைமுகமாகக் கூறி அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் முதல்வா் விஜய்யின் செயல் உள்ளது.

தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் யாா் தலைவா், யாா் செயலா் என்று முடிவெடுக்கும் உரிமை அந்தக் கழகத்தின் பொதுச் செயலருக்கு மட்டும் தான் உள்ளது.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தலைவா் வேண்டுமென்று குழப்பம் ஏற்படுத்தி பேரவை விதிக்கு புறம்பாக கால தாமதப்படுத்தி வருகிறாா். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் நேரடியாக தலையிட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அமைச்சா் பதவி வழங்குவது கட்சி தலைமை அனுமதியோடு வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு தமிழகத்தில் நடைபெறவில்லை. எனவே, தமிழக ஆளுநா் சட்டப்பேரவைத் தலைவரை அழைத்து கண்டிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவது என புதுச்சேரி அதிமுக அனைத்து நிா்வாகிகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளனா் என்றாா்.