அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எம்.லட்சுமி தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் ச.மார்ஸ் வரவேற்றார்.
சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முகாமைத் தொடங்கி வைத்து, நல உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது: அரசின் நலத் திட்டங்களை எளிமையாகப் பெறும் பொருட்டு தமிழக முதல்வர், மாற்றுத்திறனாளிகள் ஊனத்தின் தன்மையை 40 % குறைத்து அறிவித்தார். அரசு வேலைவாய்ப்புகளில் 3 % இட ஒதுக்கீடு வழங்கி, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம், 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவம், கல்வி, உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் 7,843 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, உரிய உபகரணங்கள் வழங்கப்படும். இவர்களின் படிப்புக்காக ஆண்டுக்கு ரூ. 2,000 வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது என்றார்.
எம்.பி.க்கள் இரா.லட்சுமணன், சு.ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் இரா.குமரகுரு, மு.சக்ரபாணி, நகர்மன்றத் தலைவர் ஜி.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.