செஞ்சி, ஆதில் நகரில் திறக்கவிருக்கும் அரசு மதுக் கடையைத் தடுத்து நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை செஞ்சியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு துரும்பர் விடுதலை இயக்க அமைப்பாளர் அருள்வளவன் தலைமை வகித்தார்.
இயக்க நிர்வாகிகள், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், செஞ்சி நகரில் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் மதுக் கடையைத் தடுத்து நிறுத்தவும், செஞ்சி வட்டத்தில் முழுமையாக டாஸ்மாக் மதுக் கடைகளை மூடவும் கோரி தொடர் நடவடிக்கை எடுக்க போராட்டக் குழு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக காவல் துறை, டாஸ்மாக் நிர்வாகம், வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்வது, ஆதில் நகரில் அமைக்க உள்ள மதுக் கடையைத் தடுக்கக் கோரி வருகிற 21-ஆம் தேதி செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது, மதுவால் ஏற்படும் உடல், சமூக பாதிப்புகளை விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பரப்புரை நடவடிக்கை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.