உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூரில் இருந்து சரக்குப் பெட்டக லாரி ஒன்று புதன்கிழமை இரவு சென்னை நோக்கிச் சென்றது. அந்த லாரியை நாமக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டினார்.
லாரி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை காலையில் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழுந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் செல்வம் லாரியில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியில் சிக்கிக்கொண்ட செல்வத்தை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு சரக்குப்பெட்டக லாரி அப்புறப்படுத்தப்பட்டது.