24-இல் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேமுதிக ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர்கள் கணபதி, கோவி. முருகன் தலைமை வகித்தனர். மாவட்டப் பொருளாளர்கள் தயாநிதி, கருணாகரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே விளைவித்து ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் இருந்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக அத்தொகையை வழங்கக் கோரியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், பல்வேறு கழக அணியினர் என அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்ற வேண்டும் என்றார்.
கேப்டன் மன்ற துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் புருஷோத்தமன், அண்ணாதுரை, குழந்தைவேல், சுந்தரேசன், விஜய்குமார், சூடாமணி, வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.