வானூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மொரட்டாண்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகன் சந்தோஷ்குமார்(23). இவர், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் இரும்பு உதிரிபாக தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டார். ஆனால், அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லையாம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வானூர் அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள சவுக்குத் தோப்பில், தலை, கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக இளைஞர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்று வானூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமேனி பார்வையிட்டு விசாரித்தார். அதில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தது சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது. சடலம் உடல் கூறு ஆய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த வானூர் போலீஸார், சந்தோஷ்குமார் எதற்கு இங்கு வந்தார், அவரை கொலை செய்தது யார், முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை மாலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டார்.