முகப்பு
விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரத்தில் 7 ஜோடிகள் தேர்வு

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம் வரம் நிகழ்ச்சியில் 7 ஜோடிகள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:32 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம் வரம் நிகழ்ச்சியில் 7 ஜோடிகள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
 விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, கீதாபவன் அறக்கட்டளை ஆகியவை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 6-ஆம் ஆண்டு சுயம் வரம் நிகழ்ச்சி விழுப்புரம், கே.கே. சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சிம்மசந்திரன் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் பழனி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
 திண்டிவனம் அரசு எலும்பு முறிவு மருத்துவர் சுரேஷ்குமார், திண்டிவனம் அரசு காது மூக்கு தொண்டை மருத்துவர் ராஜசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கொண்டு, சுயம் வரம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
 இந்த சுயம் வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள், இளம் பெண்களின் கல்வி, வேலை, தொழில் குறித்து விவரங்களை கேட்டுப் பெற்று, குடும்பத்தினருடன் கலந்து பேசி, விருப்பமுள்ள ஜோடியை தேர்வு செய்தனர். அதில், அங்கேயே 7 ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
 நிகழ்ச்சியில், கண்டம்பாக்கம் ஆக்ஸ்போர்டு ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் ராகுல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.