விழுப்புரம் மாவட்டத்தில் மே 18-இல் ஆளுநர் ஆய்வு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னையில் தனது வழக்கமான பணிகளுடன், அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (மே 18) காரில் வரும் அவர், வானூர், ஆரோவில், கோலியனூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் அன்று மாலை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை வருகிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி, பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.