மயிலம் முருகன் கோயிலில் கிருத்திகை
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் மூலவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 6 மணியளவில் வெள்ளித் தேரில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மலைப் பாதையை வலம் வந்தார்.
விழாவில் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனத்தின் 20-ஆம் பட்டம் சுவாமிகள் செய்திருந்தார்.
மயிலம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.