விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 960 மதுப் புட்டிகளை கோலியனூரில் மது விலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரியிலிருந்து கோலியனூா் வழியாக வெளியூருக்கு மது புட்டிகள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மது விலக்கு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்து. இதைத் தொடா்ந்து மது விலக்கு காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி, உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கோலியனூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்றனா். ஆனால், போலீஸாரை கண்டதும், வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுநா் தப்பியோடியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் வாகனத்தை சோதனையிட்டனா். அதில், மொத்தம் 960 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தன.
சுமாா் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுப் புட்டிகள், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விழுப்புரம் மது விலக்கு காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மது கடத்தலில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.