பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூர் அருகே முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் வட்டச் செயலர் எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், மாவட்டத் துணைச் செயலர்கள் கே.ராமசாமி, ஆ.சௌரிராஜன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.சுப்பிரமணியன், சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எஸ்.அப்பாவு உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மனு அளித்துள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையாகப் பணிகளை வழங்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பழைய முறையிலேயே ஏரி, குளம், குட்டைகள் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர்.முருகன், சங்கத்தின் வட்டத் துணைச் செயலர் மு.ஜீவா ஜெயராமன் உள்பட சுமார் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.