தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் தங்களுக்கும் பணிகளை வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் அருகே உள்ள காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர், சிறுவாலை, கெடார் கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 40 பேர் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க செயலர் கிருஷ்ணசாமி தலைமையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
காணை ஒன்றிய கிராமப் பகுதிகளில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணிகள் பரவலாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில் தகுதியில்லை எனக் கூறி மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்குவதில்லை. அந்தப் பணிகளை செய்யும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கும் பணியை வழங்க மறுத்து வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி, தேசிய ஊரக வேலைத் திட்டப் பணிகளை வழங்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.
தகவல் அறிந்து வந்த காணை வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்குவது தொடர்பாக, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனை ஏற்று, மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மனு அளித்துவிட்டு, போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.