ரிஷிவந்தியம் அருகே ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ரிஷிவந்தியத்தை அடுத்த அரியந்தக்கா பகுதியைச் சோ்ந்தவா் அரசன்துரை (64). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை காலை ரிஷிவந்தியம் - அரியந்தக்கா பிரிவு சாலைப் பகுதியில் உள்ள திருக்கோவிலூா் - துருவம் சாலையில் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, திருக்கோவிலூரில் இருந்து துருவம் நோக்கி அதிவேகமாகச் சென்ற ஆட்டோ அரசன்துரை மீது மோதியது. இந்த விபத்தில் அரசன்துரை பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீஸாா் விரைந்து சென்று அரசன்துரையின் சடலத்தை மீட்டு, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.