விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றை கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1,795 படுக்கை வசதிகளுடன் மருத்துவ சிகிச்சை மையம் செயல்படுகிறது. இதில், ஆக்சிஜன் வசதியுடன் 510 படுக்கைகளும், இதர 1,285 படுக்கைகளும் உள்ளன. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த ஏற்பாடுகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் நாள்தோறும் ஒரு வட்டத்துக்கு 3 மருத்துவ குழுக்கள் வீதம், மொத்தம் 39 மருத்துவ குழுக்களும், விழுப்புரம் நகராட்சியில் 10 மருத்துவ குழுக்களும், திண்டிவனம் நகராட்சியில் 5 மருத்துவ குழுக்களும் என மொத்தம் 54 மருத்துவக் குழுக்கள் மூலம் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
பொது மக்களுக்கு, இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற உடல் உபாதைகள் இருந்தால் இந்த முகாமில் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.