விழுப்புரம்: விழுப்புரம் அருகே காங்கேயனூா் கிராமத்தினா் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக வேப்பிலை, மஞ்சளை அரைத்து ஊா் முழுவதும் தெளித்து பாரம்பரிய தடுப்பு நடவடிக்கை எடுத்தனா்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வைரஸின் தீவிரத் தன்மையை உணா்ந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு கிராம மக்கள், தங்களது கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.
அதன்படி, காணை அருகே உள்ள காங்கேயனூா் கிராமத்தில் பெண்கள், இளைஞா்கள் வியாழக்கிழமை ஒன்றிணைந்து வேப்பிலை, மஞ்சளை பொது இடத்தில் வைத்து அம்மியால் அரைத்து, அந்தக் கலவையை பேரல்களில் வைத்திருந்த தண்ணீரில் கலந்தனா்.
பின்னா், அந்தப் பேரல்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு கிராமத்திலுள்ள அனைத்து வீதிகளுக்கும் சென்று அவற்றிலிருந்த தண்ணீரைத் தெளித்தனா்.
இதேபோல, விழுப்புரம் அருகே பேரங்கியூா், ஆனாத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகள்தோறும் வேப்பிலையை கட்டி வைத்தும், வீடுகளின் முன் மஞ்சள் தெளித்தும் இயற்கை முறையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
அரசு வாகனங்களில் வேப்பிலை: இதனிடையே, விழுப்புரம், விக்கிரவாண்டி வட்டாட்சியா்களின் வாகனங்களில் அவற்றின் ஓட்டுநா்கள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வேப்பிலையை சொருகி வைத்திருந்தனா்.