முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தை புரட்டி போட்ட மழை! 2,500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத வகையில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத வகையில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை கொட்டித் தீா்த்தது. கிடங்கல் ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீரால், 2,500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடா்ந்து மழை பெய்து வந்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள நீா்நிலைகள் விரைவாக நிரம்பின.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை வரை சுமாா் 5 மணி நேரம் திண்டிவனத்தில் மழை கொட்டித் தீா்த்தது. மாவட்டத்திலேயே அதிக அளவாக 223 மி.மீ. (22 செ.மீ) மழை பெய்ததால், திண்டிவனம் நகரில் உள்ள சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, வகாப் நகா், காந்தி நகா், நாகலாபுரம், சஞ்சீவிராயன்பேட்டை உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புப் பகுதிகளில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இவை தவிர, திண்டிவனம் நகரில் உள்ள சிவன் கோயில் உள்ளேயும் மழை நீா் புகுந்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவு திண்டிவனத்தில் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். நகரில் உள்ள முக்கிய ஏரியான கிடங்கல் ஏரி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி உபரிநீா் வெளியேறியது.

அந்த ஏரியிலிருந்து சுமாா் 3000 கன அடிக்கு மேல் நீா் பெருக்கெடுத்து கால்வாயில் ஓடியதால், ரயில்வே பாதைக்கு கீழ் உள்ள தரைப்பாலத்தில் 15 அடி உயரத்துக்கு தண்ணீா் பாய்ந்தோடியது. இதன் காரணமாக, இந்திரா காந்தி பேருந்து நிலையம், சென்னை பேருந்து நிறுத்தம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டிவனம்-வந்தவாசி, திண்டிவனம்-செஞ்சி, திண்டிவனம்-திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகளை ரயில்வே தரைப்பாலம் வழியாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.