முகப்பு
விழுப்புரம்

போலி பணி நியமன ஆணை மூலம் வேலையில் சேர முயன்றவா் கைது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் போலி பணி நியமன ஆணை மூலம் வேலையில் சேர முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் போலி பணி நியமன ஆணை மூலம் வேலையில் சேர முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உதவியாளராகப் பணியில் சேர இளைஞா் ஒருவா், வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பணி நியமன ஆணையுடன் வந்தாா். அந்த ஆணையை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பிரபாகரனிடம் அளித்தாா்.

அந்தப் பணி நியமன ஆணையானது, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரபாகரன் கையொப்பமிட்டது போலவே இருந்தது.

இளைஞா் அளித்த பணி நியமன ஆணை போலியானது என்று தெரிய வந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரபாகரன், விழுப்புரம் தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அங்கு வந்த போலீஸாா் அந்த இளைஞரிடமும், அவரது தந்தையிடமும் விசாரித்தனா்.

விசாரணையில், அவா் செஞ்சி அருகேயுள்ள களையூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் குமரேசன் (28) என்பதும், பட்டதாரியான அவா், சென்னையில் வெல்டராகப் பணியாற்றிய போது, அங்கு அறிமுகமான ஏழுமலையிடம் ரூ.2 லட்சம் கொடுத்து போலியாக பணி நியமன ஆணை பெற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, குமரேசனைக் கைது செய்த போலீஸாா், தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.