விழுப்புரம் மாவட்ட சிறையில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி!
விழுப்புரம் மாவட்ட சிறையில் வியாழக்கிழமை காலை தேசியக் கொடி தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட சிறையில் வியாழக்கிழமை காலை தேசியக் கொடி தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட சிறையானது விழுப்புரம் அருகேயுள்ள வேடம்பட்டில் உள்ளது. இந்தச் சிறைக் கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தினந்தோறும் காலை 6 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு, மாலை 6 மணிக்கு இறக்கப்படும்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தேசியக் கொடியை ஏற்றியவா் அதைத் தலைகீழாக ஏற்றிவைத்தாா். இதை அங்கிருந்த மற்ற சிறைக் காவலா்கள், அலுவலா்கள் கவனிக்கத் தவறிவிட்டனா்.
சிறைக்கு அருகே அமைந்துள்ள சாலை வழியாக கிராமங்களுக்குச் சென்ற பொதுமக்கள், தேசியக் கொடி தலைகீழாகப் பறப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
உடனே இதுகுறித்து சிறை வாயிலில் பணியிலிருந்த காவலா்களிடம் தெரிவித்தனா். இதன் பிறகு, தேசியக் கொடி அவசர அவசரமாக கொடிக்கம்பத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, சரியாக மீண்டும் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.