சிஐடியு போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் (சிஐடியு) வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் (சிஐடியு) வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் மூா்த்தி தலைமை வகித்தாா். அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு நிா்வாகிகள் ராமதாஸ், ரஹோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிதிப் பற்றாக்குறைக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும், போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக இறுதி செய்ய வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டுவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு உரிய அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து ஊழியா்களுக்கு ஓய்வூதிய கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்தில் சிஐடியு மாவட்டப் பொருளாளா் வி.பாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.