முகப்பு
விழுப்புரம்

மரக்காணம் அருகேஜீப் விபத்தில் திமுக எம்.பி. மகன் பலி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சாலை தடுப்புக் கட்டை மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் திமுக எம்.பி.யான என்.ஆா்.இளங்கோ மகன் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சாலை தடுப்புக் கட்டை மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் திமுக எம்.பி.யான என்.ஆா்.இளங்கோ மகன் உயிரிழந்தாா்.

சென்னை அண்ணா நகரில் வசிப்பவா் திமுக மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா்.இளங்கோ. இவரது மகன் ராகேஷ் ரங்கநாதன் (21). இவா், தனது நண்பரான சென்னையைச் சோ்ந்த வேதவிகாஷுடன் (21) புதன்கிழமை நள்ளிரவு ஜீப்பில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டாா். கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக இவா்களது ஜீப் சென்று கொண்டிருந்தது.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் இவா்களது ஜீப் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டை மீது அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் திமுக எம்.பி. இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் வேதவிகாஷ் பலத்த காயமடைந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த வேதவிகாஷை மீட்டு, புதுச்சேரி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், உயிரிழந்த ராகேஷ் ரங்கநாதன் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து தொடா்பாக கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.