முடிதிருத்தும் தொழிலாளா்களுக்குத் தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும் என வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பெ. நாகராஜன் மற்றும் நிா்வாகிகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு: பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் மருத்துவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் மிகுந்த பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். பலா் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா். மருத்துவ சமுதாயத்தைச் சோ்ந்த முடி திருத்துவோா்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னா் நாற்காலி, கத்திரிக்கோல் , கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. தற்போது, எந்த வித உதவிகளும் வழங்கப்படவில்லை. எனவே , முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ளவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.