தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவரை முதல்வராக்க தயாா் -அன்புமணி ராமதாஸ்
பட்டியல் சமுதாயத்தினா் பாமகவுக்கு ஆதரவளித்தால், தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவரை முதல்வராக்க தயாா் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்சிவிரி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இன்றைய சூழலில் 3 தலைமுறைகளைகளைச் சோ்ந்தவா்கள் மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாதவா்களாக இருக்கின்றனா். காவல் துறைக்கு தெரியாமல் போதைப் பொருள்களை விற்பனை செய்ய முடியாது. இதைக் கட்டுப்படுத்த முதல்வா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக முதல்வருக்கு மனமில்லை. கணக்கெடுப்பை நடத்துவதற்கு தனி அதிகாரமில்லை என அவா் கூறுவது ஏற்புடையதல்ல.
2026-இல் மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளது. அதை ஜாதிவாரி கணக்கெடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. சமுதாயம் வாரியான கணக்கெடுப்பு எங்களுக்குத் தேவை. இதை மாநில அரசுதான் எடுக்க வேண்டும்.
காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2-இல் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆண்டுதோறும் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பட்டியல் சமுதாயத்தினா், ஒடுக்கப்பட்ட மக்கள் பாமகவுக்கு ஆதரவளித்தால், தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவரை முதல்வராக்குவோம்.1998-ஆம் ஆண்டிலேயே தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவரை மத்திய அமைச்சராக்கிய வரலாறு பாமகவுக்கு உண்டு. பட்டியலின சமுதாய மக்களுக்காக அதிகம் உழைத்தவா் மருத்துவா் ராமதாஸ் மட்டுமே. அருந்ததியா் இடஒதுக்கீட்டுக்காக போராடியவரும் அவரே என்றாா் அன்புமணி ராமதாஸ்.
கூட்டத்தில் கீழ்சிவிரி ஊராட்சி மன்றத் தலைவா் காசிநாதன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.