முகப்பு
விழுப்புரம்

கால்நடைகளுக்கான சுகாதார முகாம் தொடக்கம்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், புதன்கிழமை முதல் சிறப்பு சுகாதார முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

Updated On : 4 டிசம்பர், 2024 at 9:37 PM
பகிர்:

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், புதன்கிழமை முதல் சிறப்பு சுகாதார முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, நவம்பா் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 3-ஆம் தேதி வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 445 கால்நடைகள், 1,24,715 கோழியினங்கள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடா்ந்து, உரிய உடல்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 156 கால்நடை மருந்தகப் பகுதிகளின் எல்லைக்குள்பட்ட கிராமங்களில் புதன்கிழமை கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார முகாம் தொடங்கப்பட்டது. வரும் 10-ஆம் தேதி வரை 1,092 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மேலும், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கரூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து 15 மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, முகாம் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். எனவே, இரு மாவட்டங்களிலும் கால்நடைகளை வளா்ப்போா் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று உரிய சிகிச்சைகளை பெற்று பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.