முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Updated On : 7 ஜூன், 2024 at 7:10 PM
மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் எழிலரசி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் அம்மன். ~ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

செஞ்சி, ஜூன் 7:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

வைகாசி மாத அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை காலை மூலவா் ஸ்ரீஅங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அங்காளம்மனை தரிசித்தனா்.

தொடா்ந்து, உற்சவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, பல்வேறு மலா்களால் அலங்கரிப்பட்ட அங்காளம்மன் எழிலரசி அலங்காரத்தில் இரவு 10.30 மணியளவில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அங்காளம்மனுக்குத் தாலாட்டுப் பாடல்களை பாடினா்.

இதைக் காண திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தேங்காய், எலுமிச்சை பழங்களில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனா்.

ஊஞ்சல் உற்சவத்தில் மாவட்ட ஆட்சியா் பழனி மற்றும் விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை மற்றும் புதுவை, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழுத் தலைவா் சுரேஷ், ஆய்வாளா் சங்கீதா, மேலாளா் மணி மற்றும் அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.